சனி, 15 செப்டம்பர், 2012

கல்வத்தின் அளவும் அமைப்பும்-அகத்தியர்


சித்த மருத்துவத்தில் மருந்துகளை அரைக்க பயன்படும் கல்வம் மிக முக்கியமானது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வத்தை எந்த அளவில் அமைக்கவேண்டும் என அகத்தியர் தனது பெருநூல் காவியத்தில் கூறியுள்ளார். அதைப்பற்றி இப்பக்கத்தில் விரிவாகப் பார்ப்போம்.

ஆமேதான் பண்டிதற்குக் கல்வம் சொல்வேன்
அப்பனே புலஸ்தியனே புத்திவானே
தாமேதான் நீளமது சொல்லக்கேளு
சாற்றுகிறேன் அங்குலந்தான் பதினாறாகும்
நாமேதான் அகலமது வாறதாகும்
வலமான குழியாமது வாழஞ்சொல்வேன்
போமேதான் வங்குல மிரண்டதாகும்
பொலிவான நன்னியென்ற கல்லுமாமே


கல்லான கல்லதுதான் சொல்லக்கேளு
கருக்குருந்தை செங்குருந்தை நன்னியாகும்
சொல்லுவேன் சாற்றோரம் வரம்புகம்பி
திரண்ட வங்குலமதுதான் வொன்றேயாகும்
வல்லசித்தர் சொற்படியே புலிமுகமும் வைத்து
வளமையுடன் சித்தரித்து வண்மையாக
புல்லறிவால் கல்லமைத்துச் செய்யும் யோகங்
பூதலத்தில் தேவவயித்தியானான் பாரே.
                          

                                          -அகத்தியர் பெருநூல் காவியம்
பொருள்:
சித்த மருத்துவர்க்கு பயன்படும் கல்வத்தை பற்றி சொல்கிறேன் புலத்தியனே கேளு,
கல்வத்திற்க்கு நீளமானது - 16 அங்குலம்
அகலம்                                              - 6 அங்குலம்
குழி ஆழத்தின் அளவு            - 2 அங்குலம்
விளிம்பின் அளவு                    - 1 அங்குலம்
                    -என்ற அளவில் நல்ல பொலிவான நன்னியென்ற திடமான கல் வகையில் கருங்கல் அல்லது சிவப்பு கல்லை தேர்ந்தெடுத்து கல்வம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் கல்வத்தின் முகப்பில் வல்லமையுடய சித்தர்கள் சொன்னபடி புலிமுகம் சித்தரித்து கல்வத்தை அமைக்கவேண்டும். மேற்சொல்லிய அளவு முறைப்படி நுண்ணிய அறிவோடு கல்வம் அமைத்து வைத்தியம் செய்பவன் உலகத்தில் தேவ வைத்தியனாவான் என்கிறார் அகத்தியர்.
                                                                                                                 பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                        -அறிவு மையம்-

3 கருத்துகள்: