புதன், 31 அக்டோபர், 2012

வால்மீகி இராமாயணம் உருவானது எப்படி...?


தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத்திற்கு காரணம். திருடனாக இருந்த வால்மீகியை முனிவர் அந்தஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந்து கொள்வோமே எனக் கருதி அவரை மனதால் துதித்தார்.நாரதர் அவர் முன்பு தோன்றினார். வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. முனிவர்பிரானே! என் மனதில் ஒரு கேள்வி பிறந்துள்ளது. கேட்கட்டுமா?.கேள்விகளில் இருந்து பதில்கள் பிறக்கின்றன. பிறப்பு தான் உலகின் ஜீவநாடி. கேளுங்கள், இப்போது இந்த உலகிலேயே நல்ல குணமுள்ளவர் யார்? யார் மிகுந்த தைரியசாலி? தர்மம் செய்வதில் யார் உயர்ந்தவர்? நன்றி மறக்காதவர் யார்? சத்தியம் தவறாத உத்தமர் யார்? மன உறுதியோடு திகழ்பவர் யார்? ஒழுக்கத்தை எக்காலமும் நழுவவிடாத உயர்ந்தவர் யார்? எதிரிகளுக்கும் நன்மை செய்பவர் யார்? எல்லா கலைகளையும் கற்றவர் யார்? அதீத சக்தி பெற்றவர் யார்? பார்த்த உடனேயே மனதிற்கு இனிமை தரும் இனியவர் யார்? உள்ளத்தில் பொறாமையே இல்லாதவர் யார்? யாருடைய கோபத்தைக் கண்டு தேவர்கள்கூட அஞ்சுகிறார்கள்? இப்படி பல கல்யாண குணங்களைக்கொண்ட உத்தமர் யாராவது இவ்வுலகத்தில் வாழ்கிறார்களா? என கேட்டார்.

அவரது கேள்வியை நன்றாக அசை போட்ட நாரதர், நீங்கள் கூறும் கல்யாண குணங்களைக்கொண்ட ஒரே மாமனிதர் ராமபிரான் மட்டுமே. அவர் அயோத்தி மன்னர். இக்ஷ்வாகு வம்சத்தில் அவதரித்தவர். புலனடக்கம் மிக்கவர். அவரைவிட அறிவில் சிறந்தவர்கள் இவ்வுலகில் வேறு யாருமில்லை. எப்பேர்ப்பட்ட எதிரியையும் அவர் அழித்துவிடுவார். பலம் பொருந்திய கைகள் அவரிடம் உண்டு. அகன்ற மார்பைக் கொண்டவர். எப்போதும் வில்லுடன் திரிவார். அவர் நடந்தால் உலகிலுள்ள அத்தனைபேரும் ரசிப்பார்கள். நடுத்தர உயரமுள்ளவர். அவரது மேனி கார்வண்ணம் உடையது. ஆனாலும், அம்மேனி ஒளிவீசும் தன்மை கொண்டது. அமைதியே வடிவாக இருப்பார். இந்த உலகத்தையே தாங்கும் சக்தி அவரிடம் உள்ளது. தர்மத்தை எக்காலத்திலும் கைவிடாதவர். புத்தி சாதுர்யம் அவரைப்போல வேறு யாருக்கும் இல்லை. துன்பக்கடல் சூழ்ந்து வந்தாலும் இமயமலையைப் போல அசையமாட்டார். அதேநேரம், கோபம் வந்துவிட்டால் அவர் அருகே யாரும் நிற்கமுடியாது. அவரைப் பணிந்துவிட்டால் பூமாதேவியைப்போல பொறுமையின் சின்னமாகி விடுவார். செல்வத்தில் குபேரனையும் மிஞ்சுபவர். சத்தியவான். தர்மம் அவரிடம் மட்டுமே இருக்கிறது என்றார். அது மட்டுமின்றி ராமபிரானின் கதை முழுவதையும் சொன்னார்.

ராமனின் கதை கேட்ட வால்மீகி முனிவரின் கண்களில் நீர் கோர்த்தது. இப்பேர்ப்பட்ட மகான் ஒருவர் பூமியில் வாழ்கிறாரா? என் கைகள் அவரை எழுத வேண்டும். அந்த உத்தமனின் வரலாறு இப்பூமி உள்ளளவும் நிலைக்க வேண்டும், என உணர்ச்சி பொங்கக் கூறினார்.  அன்று முதல் ராமனின் நினைவைத் தவிர அவர் மனதில் வேறு எதுவுமே இல்லை. அவரை மனதில் எண்ணிக்கொண்டே தன் சீடருடன் தமசா என்ற நதிக்கரைக்கு சென்றார். நதிக்கரையில் இருந்த ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு வந்த வேடன் ஒருவன் அம்பெய்தான். ஆண்பறவை அடிபட்டு இறந்தது. பெண் பறவை கதறியது. இதைக்கண்ட வால்மீகி முனிவர் வேடன்மீது கடும் கோபமடைந்தார்.
வேடனே! இந்த ஜோடிப் பறவைகளைப் பிரித்த நீ மனதில் நிம்மதி இல்லாமல் பல ஆண்டுகள் அலைவாய், என சாபமிட்டார். உலகத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைப் பார்த்து, ராம நாமத்தை ஒரு நிமிடம் மறந்த அவர் கோபத்திற்கு ஆட்பட்டார். முனிவராக இருந்தும் அவசரத்தில் கோபப்பட்டுவிட்டோமே என வருந்தினார். அவர் சாபமிடும்போது பிரம்மதேவன் அங்கு வந்து சேர்ந்தார். வால்மீகியின் சாப சொற்கள் கூட இலக்கியத்தரத்துடன் அமைந்திருந்ததை கேட்டு ஆனந்தம் கொண்டார். இப்படிப்பட்ட இலக்கியவாதியால்தான் ராமனின் சரிதத்தை நன்றாக எழுதமுடியும் என கருதினார். வால்மீகியின் முன்பு பிரதட்சண்யமான அவர், முனிவரே! தாங்கள் இப்போது வேடனுக்கு சாபம் கொடுத்தபோதுகூட எதுகை மோனையுடன் நாதமும் சந்தமும் கலந்து சாபம் கொடுத்தீர்கள். இப்படிப்பட்ட திறமைவாய்ந்த நீங்கள்தான் புண்ணியமூர்த்தியான ராமனின் திரு வரலாற்றை மகாகாவியமாக வடிக்க வேண்டும்,என்றார்.அதன் அடிப்படையில் உருவானதே வால்மீகி இராமாயணமாகும்.

பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt.M.A
அறிவுமையம்