வியாழன், 31 ஜனவரி, 2013

சத்தி மந்திரம் - அகத்தியர்


பாரப்பா சிவபூசை செய்துகொண்டு
பண்பான தேவிமந்திரம் பகரக்கேளு
ஆரப்பா அறிவார்கள் அறிவோமென்று
அப்பனே ஸ்ரீசிரீங் சிவயவசி வாவென்று
நேரப்பா சிவரூபி வாவாவென்று
நேர்மையுடனோர் மனதாய் நூற்றெட்டானால்
காரப்பா சத்திசிவம் ரெண்டும்வைத்துக்
கருணைபெறத் தொழிற்முகத்திற் பூசைபண்ணே
.

              
                               -அகத்தியர் பரிபாசைத்திரட்டு 500

பொருள்: முதலில் சிவமந்திரத்தை பற்றி சொன்னேன்,
அதற்கு அடுத்தபடியாக சத்தியின் பூசை மந்திரத்தை பற்றி
சொல்கிறேன் கேள்,
 


 

 "ஓம் ஸ்ரீ சிரீங் சிவயவசி வாவா சிவரூபீ வாவா" என்று
மன ஓர் நிலையோடு நூற்றி எட்டு உரு செபித்து விட்டு
எக்காரியம் செய்தாலும் அது சித்தியாகும்.

எந்த காரியம் செய்யும் முன்னும் சத்தி,சிவனுக்கு பூசை செய்து
விட்டு பின்னர் செய்ய அதில் யாதொரு தடையுமின்றி சித்தியாகும்
என்கிறார் அகத்திய மாமுனிவர்.
                  
                                       பகிர்வில் S.கலைச்செல்வன் M.A




சனி, 26 ஜனவரி, 2013

சிவ மந்திரம் -அகத்தியர்


சிவ மந்திரம்
 செய்யப்பா சிவத்தினுட மந்திரந்தான்கேளு
சீரான யென்மகனே கண்ணேசொல்வேன்
செய்யப்பா தெங்கென்றுங் கிலிவாவென்றும்
செயங்கொள்ளப் பிரபஞ்சம் வாவாவென்றும்
கையப்பா ஐயுமென்றும் ஸ்ரீறீங்கென்றும்
காமனையுந் தான்வென்ற யீஸ்வராவாவா
நொய்யப்பா நூற்றெட்டு உருவேயானால்
நோக்குமுன்னே சிவனங்கே வருவார்பாரே. (85)
                             

                                         -அகத்தியர் பரிபாஷை திரட்டு 500 
பொருள்:  மகனே சிவனுடைய மந்திரத்தை சொல்கிறேன் கேள்,
தூய்மையான ஓர் இடத்தில் உடல், மன சுத்தியுடன் வடக்கு
நோக்கி அமர்ந்து இம்மந்திரத்தை செபிக்கவும்.

"ஓம் தெங் கிலி வா செயஞ்கொள்ளப்பிரபஞ்சம் வாவா
ஐயும் ஸ்ரீறீங் காமனையும்தான் வென்ற ஈஸ்வரா வாவா"
என்று

நூற்றி எட்டு உரு செபித்தாயானால் நீ எந்த செயலை நோக்கி
செயல்பட்டாலும்அதற்கு துணையாக சிவன் வருவார் என்கிறார்
அகத்திய மாமுனிவர்.
                      
                                     பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்,ஏ

செவ்வாய், 22 ஜனவரி, 2013

ஆசையே துன்பத்திற்கு காரணம்


ஆசையே துன்பத்திற்கு காரணம்

அனைத்து துன்பங்களுக்கும் ஆசையே காரணமாகும். மண், பெண், பொன்
ஆகியவற்றின் மேல் ஆசை வைப்பதினால் பல பாவங்களையும் மனிதன்
செய்து தனது பிறவியையே நாசம் செய்து கொள்கிறான். விட்டில்பூச்சி
எரிகின்ற ஜூவாலையைக் கண்டு அதன் மேல் ஆசை வைத்து அதில்
விழுந்து தீய்ந்துவிடுகிறது. மகுடியின் இசையில் மயங்கிப் பாம்பு அகப்பட்டுக்
கொள்கிறது. தூண்டிலில் உள்ள இறைச்சித் துண்டை விரும்பி மீன் சிக்கி மடிகிறது. சுகங்களில் மனதை வைத்துத் தனது வாழ்நாட்களை வீணாகக் கழிக்கும் மனிதன்
ஆயுட்காலம் முடிந்தபின்பு ஆசையுடன் சேர்த்த அனைத்தையும் தான்
வாழ்ந்த மண்ணில் விட்டுச்செல்கிறான். சிறு துளிகளாக அலைந்து அலைந்து
சேகரித்த தேனை பிறர் கவர்ந்து செல்வது போல மனிதன் ஆசைவைத்து
பாடுபட்டுச் சேர்த்து வைத்தபணம்,பொருள்,வீடு ஆகிய அனைத்தையும்
பிறரிடம் விட்டே சென்று விடுகிறான்.


"காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற பட்டினத்தடிகளின்
கூற்றின்படி வரும்போது கொண்டுவந்ததும் இல்லை, போகும்போது
கொண்டு செல்வதும் இல்லை.

                                                பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 11 ஜனவரி, 2013

வயித்திய தர்மம் - அகத்தியர்


அரசரென்றால் பொருள் கொடுத்து
 நோய்தீர்த்து கொள்வாரதனலே யுந்தனக்குத் தருமமில்லை
நீசனென்ற எளியோர்க்கு வயித்தியஞ் செய்ய
 நிலையாத தருமமது நிலைக்குமென்று
பிரியமுடனென்குரு வேதியர்தான் சொன்னார்
 பிள்ளையென்று புலத்தியனே யுனக்குச்சொன்னேன்
பரிசனமாய் மனதில்வைத்தால் முத்தி சேர்வாய்
 பாலகனே யிதைமறந்தால் பலித்திடாதே,

பலித்திடவேணுமென்றால் புலத்தியனே ஐயா
 பாரிலுள்ள வுயிரெல்லாந் தன்னுயிர் போலெண்ணி
சலித்திடாயொரு போதுந் தருமஞ் செய்ய
 சந்தையங்கள் செய்யாதே சதிசெய்யாதே
சலித்திடவே கருமத்தால் பிறவிகிட்டுந்
 தருமத்தால் சாயுச்ய பதவிகிட்டும்
சலித்திடாய் சற்குருவை யடுத்துக்காரு
 சதாகாலஞ் சதாசிவனைப் போற்றிப்பாரே.

                                                  -அகத்தியர் பரிபூரணம் 400

பொருள்:

நாட்டை ஆளும் அரசன் என்றால் எவ்வளவு பொன்,பொருள்
கொடுத்தும் தன் நோயை தீர்த்துக்கொள்வான்,
அப்படி நீ அவர்களிடம் நிறைய பொருள் வாங்கிக்கொண்டு

வயித்தியம் செய்வதால் உனக்கு தருமம் உண்டாகாது.
வறுமையில் வாழும் ஏழை, எளியோர்க்காக சேவை

அடிப்படையில் பணம் வாங்காமலும் அல்லது குறைந்த
அளவில் பணத்தை பெற்றுக்கொண்டும் நீ செய்யும்
வயித்தியத்தில்தான் உனக்கு தருமம் உண்டாகும்.
அத்தர்மம்தான் நிலைத்து நிற்கும் என வேதநாயகனான

என் குரு(சதாசிவன்)தான் இதை எனக்கு சொன்னார்.
என் பிள்ளைபோல் நினைத்து புலத்தியனே உனக்கு

இதை சொல்கிறேன், அக்கறையோடு இதை மனதில் வைத்து
செயல்பட்டால் முத்தி நிலையை அடைவாய்
இதை மறந்தால் நீ செய்யும் வயித்தியங்கள் பலிக்காமல்
போய்விடும்.




நீ செய்யும் வயித்தியங்கள் பலிக்க வேண்டுமென்றால்
உலகிலுள்ள உயிர்களையெல்லாம்
தன்னுயிர் போல எண்ணி தர்மம் செய்வதற்கு
ஒரு போதும் சலித்துக்கொள்ளாமல் செயல்பட வேண்டும்.
பணத்திற்க்காக வயித்தியம் செய்யாதே, ஏழைகளிடம்

பேரம் பேசாதே, யாருக்கும் சதி(கெடுதல்) செய்யாதே,
அப்படி செய்தால் நீ செய்யும் கர்மவினையால் மிண்டும்,
மீண்டும்
 பிறவிகளை எடுத்துக்கொண்டே இருப்பாய்.

தர்ம சிந்தனையுடன் எப்போதும் தர்மம் செய்வாயானால்
பிறப்பு, இறப்பற்ற மோட்ச நிலை உண்டாகும், பரலோக பதவி
கிடைக்கும்.எனவே எப்பொழுதும் தர்ம சிந்தனையோடு
தன் குருவை மனதால் நினைத்து வணங்கி விட்டு மருந்தை
செய்யவும். மருந்தை செய்து முடித்ததும் இம்மருந்தை
உண்பவர் பூரண குணம் பெறவேண்டுமெனவும்,
தனது வயித்தியம் பலித்திட வேண்டுமெனவும்
சதாசிவனை நினைத்து பூசை செய்து பின்னர் மருந்தினை
உன்னை நாடி வருவோர்க்கு வழங்க வேண்டும்
என்கிறார் அகத்தியர்.
                                                 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வியாழன், 3 ஜனவரி, 2013

பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர்


மனிதனாக பிறந்த நாம் அறிந்து
அறியாமலும் நித்தம் பல
பாவங்களை செய்து கொண்டுதான்
இருக்கிறோம். அதன் பயனாய்
வறுமை, உடல் நலக்குறைவு,
காரியத்தடை, தீராத கவலை என
எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். அப்படி நம்மை பாடாய்படுத்தும் அந்த பாவங்களை களைய வழியே இல்லையா?, செய்த பாவங்களுக்கு பிரயாசித்தம்தான் என்ன? இனியாவது மனம் திருந்தி நல்வழியில் வாழ்ந்து மோட்ச நிலையை அடையமுடியாதா? என ஏங்குவோரும் நம் முன்னோர்கள் செய்த பாவங்களால் பிள்ளை இல்லாமல் போவது, குடும்பம் வறுமையிலே இருப்பது, அனைத்திலும் தோல்வி உண்டாதல், தீராத நோய்க்கு ஆட்படுதல் கை,கால் ஊனமாதல், மூளை வளர்ச்சி இன்மை, அற்ப ஆயுளில் மரணம் ஏற்படுதல் போன்ற பாவவினைகளை அனுபவிப்பவர்களும் இனியாவது மனசுத்தியோடு நீண்டகாலம் நிம்மதியாக வாழ்ந்து மோட்ச நிலையை அடைய இப்பதிவு ஒரு விளக்கின் ஒளி போல உங்களுக்கு வழிகாட்டடும்.



       பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர்

காணவே யின்னமொரு சூட்சங்ககேளு
கருணையுட னுலத்தோடிருக்கும்போது
பூணவே கண்ணாரக் கண்டபாவம்
 புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
பேணவே காதாரக் கேட்டபாவம்
 பெண்வதைகள் கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம்
 ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே.

காரப்பா கருணைவிழி மனக்கண்ணாலே
காலறிந்து யோகமதால் அங்லங்கென்று
நேரப்பா நிலையறிந்து நிலையில்நின்று
நீ மகனே நூற்றெட்டு உருவேசெய்தால்
வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம்
வெகுகோடி பாவமெல்லாம் விலகுந்தானே.

                                               -அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:
          
 உங்களின் பாவங்கள் நீங்க ஒரு சூட்சமத்தை சொல்கிறேன்
கேளுங்கள், நீங்கள் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும்
யாருக்கும் எந்த பாவமும் செய்யாதிருந்தபோதிலும் உங்கள்
வாழ்வில் பாவங்கள் சேர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அது எப்படி என்றால் ஒருவன் செய்யும் பாவச்செயலை கண்டும்
அதை தடுக்காமல் போவதும்( கண்ணாரக் கண்டபாவம்),
 தீய சொற்களையும், தீயவர்களின் வஞ்சகப்பேச்சுகளை,
அவச்சொற்களை கேட்பது(காதாரக் கேட்டபாவம்)
உங்கள் மனமகிழ்ச்சிக்காக பிறரை
துன்புறுத்துவது(மனதாரச் செய்தபாவம்) பெண்களை
கொடுமைப்படுத்து, பசுக்களை துன்புறுத்துவது ஓரறிவு முதல்
ஆரறிவு வரையிலான உயிர்களை கொன்ற பாவங்கள் உங்களின்
முன்னோர்கள் செய்த பாவமென எத்தனை கோடிப்பாவங்கள்
இருந்தாலும் அவைகள் நீங்க ஒரு சூட்சம
மந்திரத்தைசொல்கிறேன் கேளுங்கள்.

உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில் மான்தோல் விரித்து
(இன்றைய நிலையில் அது சாத்தியம் இல்லை என்பதால் அதற்கு
நிகர் கம்பளியை விரித்து வடமேற்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு
மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக இழுத்து அடக்கிக்கொண்டு
மனஓர்நிலையோடு மனதினுள் "ஓம் அங் லங்" என்ற மந்திரத்தை
108 -உரு செபிக்க வேண்டும். இப்படி செபிப்பதால் உயிரைக்கொன்ற
பாவம் முதல் எப்படிப்பட்ட கொடியபாவங்களும் விலகி விடும்
என்கிறார் அகத்திய மாமுனிவர்.

                                                         பகிர்வில் S.கலைச்செல்வன் M.A